*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:89
தேதி:23-10-2022
புத்தகம் எண்ணிக்கை:89
தலைப்பு: சாரதா வாழ்க்கையும் உபதேசங்களும்
தமிழில்: மங்கையர் கரசி
விலை:20
பதிப்பகம்:ராமகிருஷ்ண மடம்,மயிலாப்பூர்
நிலமகள்
பெற்றெடுத்த
நிலாமகள்...!
காமம்
தீண்டா
கருணைத்தாய்...!
அரிதார
பூமியில்
தோன்றிய அவதாரம்...!
இல்லறம் இன்பம்
துறந்து
துறவற இன்பம் ஏற்று
நல்லறம் செய்த அறம்...!
இத்தகு மேன்மை வாய்ந்த அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் உபதேசங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
** இந்நூலில் அன்னையின் இளமைப்பருவம் முதல் இறப்பு வரையிலும் 16 கட்டுரைகளும் இறுதியில் 17 வதாக அன்னையின் உபதேசங்களும் தொகுக்கப்பட்டுள்ளது
**உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உன் குறைகளையே பார். உலகத்திலுள்ள எல்லோரையும் உனதாக்கிக் கொள். யாருமே அன்னியர் அல்லர். உலகம் முழுவதும் உனது உறவே!” -மரணப் படுக்கையில் இருந்தபோது கடைசியாய் அவர் உலகிற்கு அளித்த வார்த்தைகள் அவை. அவரது வாழ்க்கை முழு வதுமே ஆன்மிகப் பாதையில் தான் இருந்தது. ஆனால், அதைப் பார்த்த சாதாரண மக்களுக்கு அவரது வாழ்க்கை வினோதமாகப்பட்டது. அவர் அன்னை
சாரதா தேவி.உலக மக்கள் அனைவரையும் உறவாக கருதியவர் என் மனதையும் கவர்ந்தவர்.
**நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த இயல்பான வடிவங்களின் இறைத்தத்துவத்தை விளக்கிக் காட்டியவர் ராமகிருஷ்ணர். அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அன்னை சாரதா தேவி. ராமகிருஷ்ணரின் மனைவியாக மட்டுமல்லாமல் அவரது முதல் சீடராகவும் இருந்தார். பின்னால் வந்து சேர்ந்த சீடர்களுக்கு எல்லாம் நல்ல தாயாகவும் விளங்கினார்.
* பெண்ணாய் பிறந்து
மகளாய் வாழ்ந்து
மனைவியாய் மாறி
மீண்டும் தாயாய்
நிலைக்கொண்டு
அன்பால் அறிவால்
அரவணைத்தா
அற்புதமான விளக்கு...!
**மேற்கு வங்காளத்தில் வயலும் வாய்க்காலுமாகப் பசுமை படர்ந்திருந்த அழகிய கிராமம் ஜெயராம்பாடி. அங்கு வாழ்ந்த ராமச்சந்திர முகர்ஜி – சியாம சுந்தரி தம்பதியரின் மகள் சாரதா தேவி. முதலில் அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தாகூர் மணி என்பது, பின்னாளில் சாரதா மணியாக மாற்றப்பட்டது. ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் கொண்டபோது அவரே சாரதா தேவியாக அழைக்கப்பட்டார்.
**1872 இல் மார்ச் மாதம் சாரதா தனது தந்தை மற்றும் சில உறவினர்களுடன் ராமகிருஷ்ணரைப் பார்க்கப் புறப்பட்டு விட்டார். ராமகிருஷ்ணர் மனைவியை அன்போடு வரவேற்றார். கிராமத்துப் பெண்கள் சொன்னது போல் அவர் ஒன்றும் பைத்தியமாக இல்லை என்பது பெரும் ஆறுதலாக இருந்தது. சாரதா அவருடனே இருந்து சேவை செய்து வாழ விரும்பினார். கணவனும் மனைவியும் ஆன்மீக வாழ்க்கையில்புதிய பாதை படைத்தனர்.
*திருமணம் என்பது
இருமனம் இணைவதல்ல...!
உள்ளார்ந்த அன்பால்
இணைந்து
உலகமக்களுக்கு
உதாரணமாக இருப்பது...!
என்பதை உலகுக்கு உணர்த்தியவர் சாரதா தேவி.
** சாரதாவே, ராமகிருஷ்ணரிடம் சொன்னார். ” நான் உங்களை உலகியல் வாழ்க்கைக்குள் இழுக்க வரவில்லை. உங்கள் ஆன்மிக வாழ்க்கையில் உதவி செய்யவே வந்திருக்கிறேன்” என்று. ராமகிருஷ்ணரும் சாரதாவை, ”உலக நாயகி யான அம்பிகையாகவே கருதுகிறேன்” என்றார். அதற்கு ஏற்றாற்போல் ஒரு அமாவாசை இரவில் ராமகிருஷ்ணர் காளி பூஜைக்கு ஏற்பாடு செய்தார். ஓர் ஆசனத்தை போட்டு பூஜைக்குத் தேவையானதைக் கொண்டு வந்தார். கடைசியாய் சாரதாவை அழைத்து வந்து ஆசனத்தில் உட்கார வைத்துப் பூஜை செய்யத் தொடங்கி விட்டார்.
*மனைவி என்பவள்
மனையை அலங்கரிப்பவள் அல்ல...!
மட்டற்ற அன்போடு
தாயாய் தாலாட்டுபவள்...!
**ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின் சாரதை விதவைக் கோலம் பூண்டதை ராமகிருஷ்ணரே எதிர்த்தார். ஒரு தரிசனத்தின் மூலம், ”நான் இறந்து போய் விட்டேனா என்ன? ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குப் போயிருக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக நீ ஏன் விதவைக் கோலம் பூண வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணர். அதன் பின் சாரதா சுமங்கலியாகவே இருந்தார்
** மனைவியை விதவைக்கோலம் பூணாமல் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று அன்றே சமூகப்புரட்சி செய்தவர் இராமகிருஷ்ணர் அவர் கனவை நனவாக்கியவர் சாரதா தேவி
**சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.
**அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர்.
**அன்னையின் அமுத மொழிகள்
** *எந்த பொருளை யாராவது கொடுத்தால் அன்பை மட்டும் பார்க்க வேண்டும் என்பதற்கு அன்னை கூறிய பொருத்தமான அமுத மொழி
*ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து கிடையாது. அப்பொருளைக் கொடுத்தவரின் அன்பைப் பொறுத்தே அப்பொருள் மதிப்பு பெறுகிறது. சிறியதோ, பெரியதோ அன்பினால் எந்தப் பொருளும் மதிப்புடையதாகிவிடும்.
**பணம் பணம் என்று அலையும் இன்றைய உலக மக்களுக்கு அன்றே அன்னை கூறியது
* போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை.பொறுமைக்கு சமமான பண்பு வேறில்லை
** நம்பிக்கை ஒன்றே முற்ற முடிவான நிலையாகும் ஒருவனிடம் நம்பிக்கை இருக்குமானால் அவன் தன் குறிக்கோளை அடைந்ததற்குச்சமம்
** அனைவருக்கும் அவரவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். துடைப்பத்திற்குக்கூட அதற்குரிய மரியாதை தரவேண்டும்
**மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார். *நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,
M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments